மூணாறில் நடந்த சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

கேரள மாநிலம், மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை கிழக்கு கிராமத்திலுள்ள கல்லூரியில் பயின்றுவரும் 39 மாணவர்கள் மற்றும் தனியார் 3 பேராசிரியர்கள் கேரளா மாநிலத்திற்கு பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்ற நிலையில் கடந்த 19.2.2025 அன்று மூணாறு பகுதியில் பேருந்து எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்குளம் வட்டம், திங்கள் நகர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி ஆர்.ஆத்திகா (வயது 20), அகஸ்தீஸ்வரம் வட்டம், கனகபுரம், அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த செல்வி.ஆர்.வேணிகா (வயது 20) ஆகிய இரண்டு மாணவியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருவரங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் செல்வன் செ.சுதன் நித்யானந்தன் (வயது 20) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில், காயமடைந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவன் செல்வன் கெவின் எட்மர் இட்சோன் சுரேஷ் (வயது 20) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.