இனி இவர்களின் குழந்தைகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அமைப்பு சாரா தொழிலாளர்களின் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய குழந்தைகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மே 1 ஆம் தேதியான இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அனைந்திருக்கும், மே தின நினைவு சின்னத்துக்கு மரியாதை செலுத்தினார். குறிப்பாக தொழிலாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலினும் சிவப்பு நிற ஆடை அணிந்து வந்தார். தொடர்ந்து மே தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட அவர், தொழிலாளர்களை வாழ்த்தக் கூடிய அரசாக மட்டுமில்லாமல், வாழ வைக்கக் கூடிய அரசாக திமுக இருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கட்டுமான தொழிலாளர்களின் திருமண உதவித்தொகை இதுவரை ஆண்களுக்கு ரூ.3000 மற்றும் பெண்களுக்கு ரூ.5000 ஆக இருந்தது. இனி அனைவருக்கும் ரூ.20,000 திருமண உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறோம். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1000 வழங்கக் கூடிய திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரித்தார்.