ரூ.24.92 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய கட்டிடம் - முதலமைச்சர் திறந்து வைத்தார்

 
mk stalin

ரூ.24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட  சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.24 கோடியே 92 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ரூ.1 கோடியே 13 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

MK Stalin


புனரமைக்கப்பட்ட சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகக் கட்டடம் சென்னை,சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகக் கட்டடம் தரை மற்றும் ஆறு தளங்களைக் கொண்டதாகும்இக்கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து இருந்த நிலையில், பணியாளர்களுக்கும், அங்கு வருகை தரும் பொதுமக்கள் மட்டுமின்றி ஆவணங்களை பராமரிப்பதிலும் சிரமமம் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடியே 92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவுற்று, முதல்வர் இன்று திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட இவ்வலுவலகக் கட்டடத்தில், நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மின்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டு, அலுவலகத்தின் ஆறு தளங்களும் புனரமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் 100 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு கூட்ட அரங்கும், முதலாவது தளத்தில் வாரியக் குழு கூட்ட அரங்கு மற்றும் 50 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு சிறிய கூட்ட அரங்கு ஆகியவை மையப்படுத்தப்பட்டுள்ள குளிர் சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், அலுவலகப் பகுதி முழுவதும் தீயணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவித்து, நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புகார் பிரிவு செயல்பட்டு வருகிறது.