ஃப்ரீ ஃபயர் விளையாட பணம் தராததால் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை

புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினத்தில் ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் விளையாட்டுக்காக, மொபைல் டேட்டா ரீசார்ஜ் செய்வதற்கு பெற்றோரிடம் பணம் கேட்ட பள்ளி மாணவன் கமலேஷ், அவர்கள் பணம் தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சை வள்ளி. இவர் புதுச்சேரி தனியார் துணிக்கடையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் அருள்தாஸ், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு இறந்து விட்டார். இவர்களுக்கு கமலேஷ் (வயது 17), ரிஸ்வான் (வயது 12) என 2 மகன்கள் உள்ளனர். கமலேஷ் புதுச்சேரியில் உள்ள வ.உ.சி அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். இவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் செல்போனில் ப்ரீ ஃபயர் எனும் விளையாட்டை விளையாடுவது வழக்கம். அதேபோல் வழக்கம் போல் நேற்று இரவும் விளையாடிக் கொண்டிருந்தார். இன்று தனது செல்போனுக்கு, ரீசார்ஜ் பண்ணுவதற்காக தனது தாய் பச்சைவள்ளியிடம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் தருகிறேன் என்று கமலேஷிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். விடுமுறை நாளான இன்று வீட்டிலிருந்தும் செல்போனில் விளையாட முடியாத காரணத்தால் மன வேதனையில் இருந்த கமலேஷ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாய் பச்சைவள்ளி மற்றும் அரியாங்குப்பம் போலீசார் வீட்டிற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பச்சை வள்ளி அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.