நாங்க தோனிய வீடியோ எடுக்க கூடாதா? தனிப்பாதுகாவலர்- செய்தியாளர்களிடையே பரபரப்பு

 
Dhoni

சிஎஸ்கே அணியின் பாதுகாப்புக்கு வந்த சிலர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. லீக் போட்டிகள் முடியும் தருவாயில் இருப்பதால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற, ஏற்கனவே வெளியேறிய மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளைத் தவிர மற்ற அணிகள் தீவிரமாக போராடி வருகின்றது. இதில் கொல்கத்தா அணி முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. 18ஆம் தேதி நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப்பில் நுழைய முடியும். அதேநேரத்தில் பெங்களூரு அணி சென்னை அணி நிர்ணயம் செய்யும் இலக்கினை பெங்களூரு அணி 18.1 ஓவரில் எட்ட வேண்டும் அல்லது சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அப்படி செய்தால் பெங்களூரு அணி ப்ளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். 


இதையடுத்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் இடையே பெங்களூரில் வருகின்ற 18-ஆம் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெறுவதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் விமானம் மூலம் பெங்களூரு செல்ல சென்னை விமான நிலையம் வந்தனர். அப்போது சிஎஸ்கே வீரர்களை அங்கிருந்த செய்தியாளர்கள் வீடியோ எடுத்தனர். உடனே சிஎஸ்கே அணியின் பாதுகாப்புக்கு வந்த சிலர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமலும் அவர்கள் மொபைலை பிடித்து கீழே தள்ளியும் வீடியோ எடுக்காமல் தடுத்தனர். நாங்க தோனிய வீடியோ எடுக்க கூடாதா? நீங்க என்ன அரசு அதிகாரியா? இது ஒண்ணும் உங்க ப்ளே கிரவுண்ட் இல்லையே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தோனியின் பாதுகாவலர், “தான் பிரசிடெண்ட் ஆப் இந்தியா” எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் .