10 நாளில் மீண்டும் கட்சி தாவிய முன்னாள் எம்எல்ஏ மீண்டும் அதிமுகவில் இணைந்தார்!

பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் மீண்டும் இன்று அதிமுகவில் இணைந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சோழவந்தான் மாணிக்கம். 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஏற்படுத்திய வழிகாட்டுதல் குழுவில் 11 பேர் கொண்ட குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார்.
இந்த சூழலில் கடந்த 24ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் ஜே.பி. நட்டா, ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக செயற்குழு கூட்டம் கூட இருந்த நிலையில் அதிமுக முக்கிய நிர்வாகி பாஜகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், மீண்டும் இன்று அதிமுகவில் இணைந்தார். கடந்த திங்கள் கிழமை அன்று ஓபிஎஸை சந்தித்த அவர் இன்று அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார். 10 நாளில் கட்சி தாவிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீண்டும் அதிமுகவில் இணைந்தது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.