ஏழேழு தலைமுறைகளுக்கும் நன்மை செய்யும் சித்ரா பௌர்ணமி பூஜை..!
எம லோகத்தில் மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்கான விழாவாகவும் இது கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் விரதமிருந்து அவரை வணங்கினால் அவர் நமது பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கை. காலப்போக்கில் இந்த பண்டிகையை கொண்டாடும் விதம் மாறினாலும், கிராமப்புறங்களில் இந்த பண்டிகை இன்னும் அதே முக்கியத்துவத்துடன்தான் கொண்டாடப்படுகின்றது.
சித்ரா பௌர்ணமி அன்று வீட்டில் வழிபாடு செய்வதுடன் ஆலயங்களில் சென்று வழிபடுவதும் மிக அவசியம். இந்த நாளில் கோயில்களின் சக்தி அதிகரிப்பதாகவும் தெய்வங்களின் வீரியம் வீறுகொண்டு வெளிப்படுவதாகவும் ஐதீகம். இந்த நாளில் ஆலயம் சென்று வணங்கினால், நம் பிரார்த்தனைகள் கண்டிப்பாக நிறைவேறும் என கூறப்படுகின்றது. இந்த நாளில் கோயிலுக்குச் செல்லும் போது அங்குள்ள நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, அதன் தாக்கத்தால் நம் வாழ்வின் நேர்மறை ஆற்றல் அதிகரித்து நமக்கு நல்வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையையே கோவிலாக கருதி பிரார்த்தனை செய்யலாம். அதிகாலையில் குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி, தெய்வங்களின் படங்களுக்கு பூ சூட்டி, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்ற கலந்த சாதங்களை நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும். மற்ற நாட்களைவிட, ஆக்கப்பூர்வமான அதிர்வலைகள் அதிகம் இருக்கும் சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பலமடங்கும் வீரியம் இருக்கும், இன்று செய்யப்படும் பூஜையின் பலனும் பன்மடங்காக இருக்கும்.
சித்ரா பௌர்ணமி பூஜையால் கிடைக்கும் நன்மைகள்:
- சித்ரா பௌர்ணமி நாளில் குல தெய்வம், இஷ்ட தெய்வம், இறைவனடி சேர்ந்த மூதாதையர்கள் ஆகியோரை மனமுருகி வேண்டினால் நம் கர்ம வினைகள் அனைத்தும் குறைக்கப்பட்டு புண்ணிய கணக்கு அதிகமாகும்.
- வசந்த காலத்தின் துவக்கத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மனித வாழ்வின் வசந்த காலத்தின் துவக்கமாக கருதப்படுகின்றது.
- இந்த நாளில் செய்யப்படும் தான தர்மம் நம் குழந்தைகளையும் அடுத்து வரும் ஏழு தலைமுறையையும் காக்கும் என நம்பப்படுகின்றது.
- மாலை வேளையில் பூஜை அறையில் விளக்கேற்றி, வீட்டு வாசலில் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து மீண்டும் குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்க வேண்டும். மாலையில் கூட்டுப்பிரார்த்தனை செய்வது மிக நல்லது. இதன் மூலம் வீட்டில் சுபிட்சம் அதிகரிக்கும்.
- மலையில், சுண்டல், பயறு வகைகள், கேசரி, சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம் போன்றவற்றை நெய்வேத்தியம் செய்யலலாம்.
- சித்ரா பௌர்ணமியன்று ஊனமுற்றோர், ஏழைகள் ஆகியோருக்கு உணவு, ஆடைகள் போன்றவற்றை தானம் செய்தால், குடும்பத்தில் எப்போதும் உணவு மற்றும் பிற வசதிகளுக்கான குறைகள் இருக்காது என ஐதீகம்.
- சித்ரா பௌர்ணமி நாளில், ஆறு, நதி, கடல் பொன்றவற்றுக்கு பூஜைகள் செய்வதும் வழக்கம். இதன் மூலம் வாழ்வில் தண்ணீரால் ஏற்படும் கண்டம் குறைந்து தண்ணீர் கஷ்டமும் தீரும் என நம்பப்படுகின்றது.

