எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்: பிரத்யேக செயலி அறிமுகம்!

 
11

தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், இரண்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாகத் தனது சொந்தத் தொகுதியான சென்னை பெரம்பூருக்கு வருகை தந்துள்ளார். வியாசர்பாடி சர்மா நகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள நவீன சட்டமன்ற உறுப்பினர் (MLA) அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக அவர் வருகை தந்தபோது, ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும் பொதுமக்களும் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனால் பெரம்பூர் தொகுதி முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டதுடன், மக்கள் வெள்ளத்தால் அந்தப் பகுதியே குலுங்கியது

அங்கு அவருக்கு தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொதுமக்கள் சார்பாக உற்சாகமான மற்றும் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான மின்சாரம், சாலை வசதி, குடிநீர், துப்புரவுப் பணி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்லும் வகையில் ‘மக்கள் சேவை தளம்’ என்ற பிரத்யேக மொபைல் செயலியையும் (App) அவர் இன்று அறிமுகம் செய்தார். இந்தத் தளம் மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களைப் பதிவு செய்த சில நொடிகளிலேயே அது நேரடியாக எம்.எல்.ஏ. அலுவலக கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதி மக்களின் நீண்ட நாள் தேவைகளை டிஜிட்டல் முறையில் விரைவாக நிவர்த்தி செய்ய இந்தச் செயலி உதவும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

தொகுதி கள ஆய்வின் ஒரு பகுதியாக, அருகில் உள்ள நியாய விலைக் கடைக்கு (ரேஷன் கடை) நேரில் சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்த அவர், தகுதியுள்ள பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டைகள் (Ration Cards), வீட்டு மனைப் பட்டாக்கள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் தனது கரங்களால் வழங்கினார். மேலும், தொகுதி மக்களிடம் இருந்து நேரடியாகப் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர், “யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்” என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதுடன், மக்களின் குறைகள் மீது மிக விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.