2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓரணியில் திரள வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

 
stalin

நீட் தடை சட்டம் , ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், பல்கலைக்கழக வேந்தர் சட்டம் முடக்கப்பட்டுக் கிடக்கிறது; இதுதான் ஆளுநர் செயல்படும் விதமா?  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “திமுகவுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான தொடர்பு என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வரக் காரணமாக உள்ளது; பேரறிஞர் அண்ணாவையும் கலைஞரையும் இணைக்கப் பாலமாக அமைந்தது இஸ்லாம்.

மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்; அதை அதிமுக, ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள்; மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டவர் கலைஞர். சாதாரண சட்டத்துக்குக் கூட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை; சூதாட்டம், நுழைவுத்தேர்வால் ஏற்படும் உயிர்ப் பலிகளைத் தடுக்கும் மசோதாவுக்கும் ஒப்புதல் தராமல் தடுக்கிறார்கள்;

stalin

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். 4 மாதங்களாகச் சட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர்; நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டத்தை அனுப்பினால், அதை கிடப்பில் வைத்துவிட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார்.பல்கலைக்கழக வேந்தர் சட்டம் முடக்கப்பட்டுக் கிடக்கிறது; இதுதான் ஆளுநர் செயல்படும் விதமா?.

உழவர்களுக்கு எதிரான 3 வேளாண் சட்டம் உடனடியாக நிறைவேறிவிடும். சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் வேகமாக நிறைவேறும்.  நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்ப்பார்கள். இந்தியை திணிப்பார்கள்;  மாற்று மதத்தினர் மீது வெறுப்பு வீண் பிரச்சாரத்தை செய்வார்கள்.  ஆனால் சூதாட்டத்தாலும்,  நுழைவுத் தேர்வாளும் உயிர்கள் பலியாவதை தவிர்க்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள்.  இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேர்தலாக 2024 ஆம் ஆண்டில்  நடைபெற்ற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் அமையப்போகிறது.” என்று தெரிவித்தார்