பொருநை அருங்காட்சியக கட்டுமான பணிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்..

 
mk stalin mk stalin

பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்கான  கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை  கூட்டத்தொடரில் நெல்லை மாநகரில் பொருநை  நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உலகத்தரம் வாய்ந்த  அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தப்படும் என்றும் என்று அவர் அறிவித்தார்.  இதனையடுத்து  நவம்பர் மாதம் முதல்  நெல்லையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள்  ஈடுபட்டு வந்தனர்.

  அகழாய்வு பொருட்கள்

அதன்படி, பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில்  13 ஏக்கர் நிலத்தில்  பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.  அமைச்சர் தங்கம் தென்னரசு அந்த  இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்தில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில் தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும்  வகையில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமான பணிகளை தொடங்க இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே  காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.