முதல்வர் ஸ்டாலின் மனம் விட்டு பேசி வீடியோ வெளியீடு..!!

 
Q

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட. வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்.தேர்தல் பிரசாரம் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது.தமிழகம் முழுவதுமாக நான் மக்களை சந்தித்தாலும் இந்த வீடியோ மூலமாக சிலவற்றை மனசு விட்டு பேச விரும்புகிறேன். இன்னும் கொஞ்ச நாட்களில் தேர்தல். இந்த நேரத்தில் எனக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது.

2021ம் ஆண்டு இதேபோன்று ஒரு சட்டசபை தேர்தல் வந்தது. அப்போது ஸ்டாலின் கருணாநிதியை விட ஆபத்தானவர் என சிலர் பேசினர். கருணாநிதியுடன் என்னை எப்போதும் ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பா என சொன்னதை காட்டிலும் தலைவர் என அழைத்ததே அதிகம்.

அப்படிப்பட்ட தலைவருடன் என்னை ஒப்பிடுகையில், தமிழகத்தை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், நம்முடைய வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்னைக்குமே ஆபத்தானவன் தான். அந்த வகையில் கருணாநிதியை விட ஒரு படி மேலே இருப்பது எனக்கு பெருமை தான். இதெல்லாம் நம் தமிழர்களின் ரத்தத்திலேயே உள்ளது. எப்போதும் தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசை எதிர்த்து சண்டை செய்ததை பெருமையாக கருதுகிறேன். சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள். எந்த மாநிலமும் தொடாத இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் தொட்டு இருக்கிறது. இன்னும் உயரம் தொடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எல்லா வகையில், நாம் முன்னேறி இருந்தாலும் சில குறைகள் இருக்கின்றன என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் மக்களின் கருத்துகளையும் நான் காது கொடுத்து கேட்கிறேன். ஆனால், குறைகளாக சொல்லப்படும் சில விஷயங்களில் கூட மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் நாம் சிறப்பாகவே இருக்கிறோம். ஆனால், அந்த குறைகளையும் சரி செய்ய நாம் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அதன் விளைவுகளை இன்னும் சிறிது நாட்களில் நாம் பார்ப்போம். மத்திய பாஜ அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு முதல் எதிர்ப்பை பதிவு செய்தது திமுக. நான் மசோதா நகலை கொளுத்தினேன்.

நாம் பற்ற வைத்த நெருப்பு தான் தொகுதி மறுவரையறை மசோதாவை சாம்பலாக்கியது. தேர்தல் நடக்கும் நேரத்திலேயே தொகுதி மறுவரையை எனும் மசோதா மூலம் மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது என்றால், இந்த தேர்தலில் அவர்களது ஆதரவாளர் இபிஎஸ் ஜெயித்துவிட்டால் என்னென்ன கொடுமைகள் எல்லாம் இங்கு அரங்கேறும் என நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. பாஜ மாதிரியான மதவாத சக்திகள் திமுகவை ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், திமுக ஒருபோதும் ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல.

திமுக இந்து விரோதி என்பது போல ஒரு தோற்றத்தை சித்தரிக்கின்றனர். அதேநேரம், சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் திமுக எப்போது களத்தில் நிற்கும். கருணாநிதியின் மகனான ஸ்டாலின் இன்று அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன். இப்போதும் ஒரு பிரச்னை என்றால் எதிர்த்து நிற்பவன் தான் இந்த ஸ்டாலின். எந்த பிரச்னை வந்தாலும் தமிழகத்தையும், தமிழர்களையும் பாதுகாத்து நிற்பேன். இது என்னுடைய உறுதிமொழி. எந்த வகையில் வந்தாலும், எத்தனை முறை முயற்சி செய்தாலும் திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜகவும், அவர்களது கொடூரமான சித்தாந்தங்களும் ஜெயிக்க முடியலன்னு வரலாறு சொன்னா போதும். அதுமட்டும் போதும். உங்களிடம் உரிமையோடு கேட்கிறேன். மீண்டும் நல்லாட்சி தொடர உதய சூரியன் சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் சின்னத்திலும் ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.