ப.சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

ப.சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
குஜராத்தில் நடந்துவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சோர்வடைந்து காணப்பட்ட ப.சிதம்பரத்தை கட்சி நிர்வாகிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்ததால் நிர்வாகிகள் தூக்கி சென்று குஜராத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வெயில் காரணமாக அவர் மயங்கிவிழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து, அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.4.2025) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சிதம்பரம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.