மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன மழை கொட்டித் தீர்த்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த கன மழையால் வெள்ள நீர் வீடுகளில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்ட பகுதிகளில் பயிர்கள் சேதம் அடைந்தன.
இந்த சூழலில் வங்கக்கடலில் புதிதாக ஒரு உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை முதல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பெய்த கனமழையின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை பாதிப்புகளை சமாளிப்பது, உடனுக்குடன் மீட்பு பணிகளை துரிதமாக நடத்துவது , நிவாரண பணி உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.