மும்பை புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியில் முதல் 2 ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பீஹார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்தக் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் இன்று (ஆக 31) மற்றும் நாளை ( செப்.1) ஆகிய தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
6 மாநில முதல்வர்கள் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கூட்டணிக்கான புதிய சின்னம், பொது செயல் திட்டம் , தொகுதி பங்கீடு , பிரதமர் வேட்பாளர் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இன்றைய தினம் அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் மும்பை செல்கிறார். இன்று மாலை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் , சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்திலும் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். தொடர்ந்து நாளை நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்ற பின், இரவு மீண்டும் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.