ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

 
stalin

ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலமொழித் திரைப்படங்கள் ஆஸ்கர் விருது வென்றுகளை வென்று வருகின்றன. அந்தவகையில்  சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் இந்தியாவின் ‘The Elephant Whisperers'ஆஸ்கர் விருதை வென்றது. தமிழ் ஆவண குறும்படமான இந்தப்படத்திற்கு அறிவிக்கப்பட்ட விருதை இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர். யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Oscars

அதேபோல், ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஆர். ஆர். ஆர். இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்  ஏற்கனவே கோல்டன் குளோப் விருது வென்ற நிலையில்  தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.  பாடலை எழுதிய சந்திர போஸ்  மற்றும் இசையமைத்த கீரவாணி ஆகிய இருவரும்  ஆஸ்கர் விருதினை பெற்றுக்கொண்டனர்.  

Oscars - Nattu Nattu

இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,   “முதுமலை தம்பதியினர் பற்றிய ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது பெற்ற கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்காவுக்கு வாழ்த்துகள்..  இரண்டு பெண்கள் இணைந்து இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்று தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதன் முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்ற தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. ” என்று குறிப்பிட்டுள்ளார்.  

 


அதேபோல், “ ஆசியா மற்றும் இந்தியாவின் முதல் பாடல் ஒன்று ( ‘நாட்டு நாட்டு’பாடல்) ஆஸ்கர் விருது வென்று வரலாறு படைத்துள்ளது.  ஆஸ்கர் விருது வென்ற  அற்புதமான சாதனைக்காக  ஆர் ஆர் ஆர் திரைப்பட குழுவினர்  கீரவாணி, சந்திரபோஸ்,  கால பைரவா , ராகுல் சிப்ளிகஞ்ச் , நாம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ராஜமௌலி  அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று முதல்வர் ஸ்டாலின்   தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.