பெரியார் குறித்து அவதூறு பேச்சு...சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் கைது!
தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து சென்னையில் அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யபட்டுள்ளனர்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “உலகில் எந்த நாட்டில் மது இல்லை. உடல் இச்சை வந்தால் பெற்ற தாயிடமோ, மகளிடமோ உறவு வைத்துக் கொள் எனக் கூறுவதுதான் பெண் உரிமையா? திராவிட கழகங்களுக்கு என்ன தத்துவம் இருக்கிறது. கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னை மரங்களை வெட்டியவர் பெரியார். மரத்தை வெட்டி சாய்ப்பதுதான் பகுத்தறிவா? அல்லது எங்கள் தோப்பில் கள் இறக்க அனுமதி இல்லை என்று கூறுவது பகுத்தறிவா? தந்தை பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. சமூக நீதிக்காக போராடியது தந்தை பெரியாரா? அல்லது ஆனைமுத்துவா? என கூறினார். சீமானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த நிலையில், தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து சென்னையில் அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யபட்டுள்ளனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.