அம்மா உணவங்கங்களின் விற்பனை உயர்ந்ததற்கு ஸ்டாலின் தான் காரணம்! விஜய் அல்ல- மேயர் பிரியா

 
ச்

2022 ம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளதாக மேயர் பிரியா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மேயர் பிரியா தனது எக்ஸ் தளத்தில், “திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சாராக பொறுப்பேற்றது முதலே அம்மா உணவகங்களை தரம் உயர்த்திடவும், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்கிட தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, 2022 ம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. 2025-26 ம் நிதியாண்டில் ௹.7.06 கோடி செலவில் அம்மா உணவகங்களின், இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டன. அம்மா உணவகங்களின் கட்டிடங்கள் புனரமைப்பு பணிகளுக்கு 2024-25  நிதியாண்டில் ௹.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 290 அம்மா உணவக கட்டிடங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.


இதன் எதிரொலியாகவே, அம்மா உணவகங்களில் பயன்பெறும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததுடன், 2026 ஜனவரி மாத வருவாய் 1 கோடியே 13 லட்சத்தை எட்டியது. பின்னர் ஒவ்வொரு மாத வருவாயும் 1 கோடி ரூபாய்க்கு மேல் என்ற சராசரி நிலையில் நீடித்தும் வந்தது. இந்நிலையில் தான் சர்வதேச போர் பதற்ற சூழலால் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் உணவு தயாரிப்பு அளவும், விற்பனையும் ஏப்ரல் மாதம் மட்டுமே சரிந்தது. பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், மே மாதம், ஜூன் மாதங்களில் மீண்டும் விற்பனை முந்தைய நிலையை (௹.1 கோடிக்கு மேல் விற்பனை) எட்டியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.