மக்கள் வாழ தகுதியற்ற மாநகரமாக சென்னை.. இதுதான் திமுகவின் திட்டமா?? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்..

 
anbumani

தொழில் வரி 35% , உரிமைக் கட்டணம் 100% வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையை ஏழை, நடுத்தர மக்கள் வாழத்தகுதியற்ற  மாநகரமாக மாற்றுவது தான் திமுகவின் திட்டமா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் மாத வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை 35%  வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான  வணிக உரிமக் கட்டணத்தை 100% வரையிலும் உயர்த்தி மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் இந்த வரி மற்றும் கட்டண உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. 

chennai corporation

மாத வருமானம் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை உள்ள பணியாளர்களுக்கான தொழில் வரியை  35% வரை உயர்த்தியுள்ள  சென்னை மாநகராட்சி, அதற்கும் கூடுதலாக ஊதியம் பெறுவோருக்கான தொழில்வரியை உயர்த்தவில்லை. அதேபோல், பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கும் சென்னை மாநகராட்சி, தேநீர்க் கடைகள், மருந்துக் கடைகள், முடி திருத்தும் கடைகள்  போன்றவற்றுக்கான உரிமத் தொகையை ரூ.10 ஆயிரம் ஆகவும், வேறு சில கடைகளுக்கான உரிமத் தொகையை  ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தியிருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. வாழ்வாதாரம் தேடி சிறியகடைகள் நடத்துவோரிடம் கூட இந்த அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்துவதை  மன்னிக்கவே முடியாது.

மக்கள் வாழ தகுதியற்ற மாநகரமாக சென்னை.. இதுதான் திமுகவின் திட்டமா?? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்.. 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் தான் 175% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆனால்,  மாநகர மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படுவதில்லை.  2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவில் வீடுகளை கட்ட விரும்புவோர் ஆன்லைனில்  விண்ணப்பித்து அனுமதி  பெறும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சலுகை வழங்குவதாகக் கூறி அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி 1000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கான கட்டணம் ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பயன்களை விட பாதிப்புகளே அதிகம்.

சென்னையில் ஏழைகளோ, நடுத்தர மக்களோ வாழவே கூடாது என்ற எண்ணத்துடன் அவர்கள் மீது தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும்  வரி உயர்வு மற்றும் கட்டண உயர்வுகளை சுமத்தி வருவது மனிதத்தன்மையற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்து விட்டோம், இனி மக்களின் தயவு தேவையில்லை என்ற அதிகார மமதையுடன் செயல்படும் திமுகவுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.