சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! - மு.க.ஸ்டாலின்..!

 
ஸ்டாலின்

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு என்றாலே ‘மதராஸ்..  மதராஸி..’ என்றிருந்த பெயர் மாறி ‘சென்னை’ என  உருவான நாள் இன்று.. ஆம் நம் நவீன சென்னைக்கு இன்று (ஆகஸ்ட் 22) 386வது பிறந்த நாள் ஆகும்.  1639 ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் நாயக்க மன்னர்களிடமிருந்து நிலம் மீட்கப்பட்ட  நாள் தான் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அதன்பிறகு தான் சென்னை தமிழ்நாட்டின் தலைநகராக தோற்றுவிக்கப்பட்டது.  தமிழ்நாட்டி பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சென்னை ஒரு வரப்பிரசாதம் தான்..  தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையே 8 கோடி தான் என்றால், அதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மட்டும் 1 கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.  

 சென்னை

லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்துள்ள சென்னை  இன்று தனது 386வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, 
வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, 
பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, 
எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,
சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,

மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!  சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை!” என்று குறிப்பிட்டுள்ளார்.