டாஸ்மாக் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற கோரி முறையீடு

அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம், தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை வேறு அமர்வுக்கு மாற்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் முறையிட்டுள்ளார்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை, மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்கள் போக்குவரத்து உரிமங்கள் வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, அமலாக்க துறையின் சோதனையையும், பறிமுதலையும் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசு தரப்பிலும், டாஸ்மாக் நிர்வாகம் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம், தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை வேறு அமர்வுக்கு மாற்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் முறையிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் முன்பு மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் முறையிட்டுள்ளார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் உள்ள வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளார். அமர்வில் உள்ள ஒரு நீதிபதியின் சகோதரர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞராக இருந்துள்ளதால் மாற்ற வலியுறுத்தியுள்ளார். உரிய அமர்வில் முறையிடுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.