ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரிக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

 
high court

ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்க எதிர்ப்புத் தெரிவித்து கோவையைச் சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழாவால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக அவர் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழாவின் போது அனைத்து விதிகளும் பின்பற்றப்படுகின்றன. கழிவு நீர் மேலாண்மை மற்றும் ஒலி மாசுவை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.