பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. IPC-ல் இருந்து பி.என்.எஸ். சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக FIR வெளியாகிவிட்டது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.