சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிண்டிக்கு இடமாற்றம்..!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிண்டிக்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அடில், “மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் 2130 சதுர மீட்டர் நிலத்தில் புதிய பல அடுக்கு நீதிமன்ற கட்டிடம் கட்டப்படவுள்ளது. ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் வருகை அதிகரித்து கூட்ட நெரிசல் மற்றும் மக்கள் வந்து செல்ல போதிய இடவசதியின்மை ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, அதிக மக்கள் தொகை மற்றும் அதிக வருவாய். வட்டங்களை உள்ளடக்கிய சென்னை மாவட்ட வருவாய் நிருவாகம் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பிற மாவட்டங்களில் இருப்பதைப் போன்று மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் கூடிய சென்னை மாவட்ட வருவாய் நிருவாகத்திற்கு உட்பட்ட அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்பட ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பது இன்றியமையாததாகும்.
இதனையடுத்து, கிண்டி வட்டம் வெங்கடாபுரம் சர்க்கார் புறம்போக்கு காலி வகைபாடு கொண்ட நிலத்தினை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக சொந்த கட்டிடம் கட்ட நிலமாற்றம் செய்யக் கோரி பரிந்துரை செய்து சென்னை மாவட்ட ஆட்சியர், நில நிருவாக ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்கு ஆட்சேபனை எதுவும் பெறப்படவில்லை. அத்துடன், இது காலி மனையாக உள்ளது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதான சின்னங்கள், மயானம், மதச்சார்புடைய வழிபாட்டுத் தலங்கள் எதுவும் இல்லை, உயர் மின் அழுத்த கம்பிகள் எதுவும் செல்லவில்லை என சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிபந்தனைகள் என்ன தெரியுமா?
- அரசு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கேட்புத்துறை கட்டுப்படல் வேண்டும்.
- எந்த நோக்கத்திற்காக நிலமாற்றம் செய்யப்படுகின்றதோ அதற்காக மட்டுமே குறிப்பிட்ட நிலத்தினை பயன்படுத்த வேண்டும்.
- எதிர்காலத்தில் குறிப்பிட்ட புலமோ அல்லது அதன் ஒரு பகுதியோ கேட்புத்துறைக்கு தேவையில்லை என்றால் அதனை அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையிடம் கேட்புத்துறை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
- பிரஸ்தாப புலத்தில் நீர்வழி ஏதேனும் இருப்பின், கேட்புத்துறை அதனை தடை செய்யக் கூடாது.
இது தொடர்பாக வருவாய் ஆவணங்களில் உரிய திருத்தங்களை ஒரு மாத காலத்திற்குள் மேற்கொள்ளுமாறும் நில நிருவாக ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது எக்ஸ் பக்கத்தில், “சைதாப்பேட்டை தொகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரைவில்” என்று பதிவிட்டுள்ளார். கிண்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதன் மூலமாக மக்களின் சிரமம் வெகுவாக குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சைதை தொகுதியில் விரைவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்... #Masubramanian #TNHealthminister #Saidapetconstituency pic.twitter.com/A6uO0dNcBl
— Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Subramanian_ma) September 21, 2025
சைதை தொகுதியில் விரைவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்... #Masubramanian #TNHealthminister #Saidapetconstituency pic.twitter.com/A6uO0dNcBl
— Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Subramanian_ma) September 21, 2025

