சென்னையில் 15,038 பேருக்கு கொரோனா சிகிச்சை : சென்னை மாநகராட்சி தகவல்
தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதனால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,077 பேரும் அண்ணா நகரில் 1,553 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 1,141 பேரும் தேனாம்பேட்டையில் 1,432 பேரும் தண்டையார்பேட்டையில் 848 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா உறுதியான 82,128 பேரில் 15,038 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 1,341 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் ஆண்கள் 58.30 சதவீதம் மற்றும் 41.70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 65,748 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.