சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 50,000ஐ நெருங்குகிறது; மண்டலவாரி விவரம் வெளியீடு!
தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,657 பேரும் அண்ணா நகரில் 2,511 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 1,741 பேரும் தேனாம்பேட்டையில் 2118 பேரும் தண்டையார்பேட்டையில் 1,628 பேரும் அடையாறு மண்டலத்தில் 1,412 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னையில் கொரோனாவால்பாதிக்கப்பட்ட 72,500 பேரில் 21,766 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒரே நாளில் 8,128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.