போலீசாருக்கு கிடைத்த முக்கிய தகவல்...சென்னையில் முக்கிய சாலைகளில் தடுப்பு!!
சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நேற்றிரவு முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சென்னையில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடும் மோகம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோக்கள், கடந்த மாதம் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்ட நிலையில், மெரினா கடற்கரையில் வைத்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதும், இரவு நேரங்களில் குழுக்களாக பிரிந்து ஈசிஆர், ஓஎம்ஆர் ,மெரினா கடற்கரை சாலைகளில் பைக் சாகச ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்படி கடந்த மாதம் மட்டும் 37 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.
சிறுவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட போவதாக நேற்று தகவல் வெளியானதையடுத்து முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்பு தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைத்து, தீவிர வாகன சோதனை நடைபெற்றது. சாலை விதிகளை மீறி சென்றவர்களிடம் அபராதம் விதித்தும் , இரவு நேரங்களில் தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களை அறிவுரை கூறியும் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.