காவல்துறைக்கு அதிரடிச் செக்! "இனி சம்மன் இல்லாமல் யாரையும் விசாரிக்கக் கூடாது" - உயர் நீதிமன்றம் கெடுபிடி!

 
high court

விசாரணை என்ற பெயரில் தன்னை காவல் துறையினர் துன்புறுத்தக் கூடாது என, உத்தரவிட கோரி, சென்னை தி.நகரைச் சேர்ந்த ராஜா என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என, காவல் துறைக்கு உத்தரவிட கோரி, ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. காவல் துறை புலன் விசாரணையில், வழக்கமாக நீதிமன்றம் தலையிடுவதில்லை.

அதேநேரம், விசாரணை என்ற போர்வையில், காவல் துறையினரால் நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்கள், நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வரப்படும்போது, கண்மூடி கொண்டிருப்பது இல்லை.எனவே, விசாரணைக்கு முறையாக, 'சம்மன்' அனுப்ப வேண்டும்; அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, குறிப்பிட வேண்டும்.விசாரணை நடவடிக்கைகளை, காவல் நிலைய குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படுபவரை துன்புறுத்தக் கூடாது.

மேலும், முதற்கட்ட விசாரணை அல்லது எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை, காவல் துறையினர் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.