கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
நெல்லை ஐடி மென் பொறியாளர் கவின் கொலை வழக்கில் 83 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஜூலை 27ல் தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் வயது 25. என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், என்ற வாலிபர் தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார். இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சுர்ஜித்தை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் தந்தையான உதவி சார்பு காவல் ஆய்வாளர் சரவணனையும் காவல்துறையினர் கைது செய்தனர். சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்த நிலையில் 3வதாக இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெரியம்மா மகன் ஜெயபாலனை கைது செய்தனர். தற்போது இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை உதவி சார்பு ஆய்வாளர் சரவணன், சுர்ஜித்தின் உறவினரான சகோதரர் ஜெயபாலன் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளனர்.
கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி சார்பு ஆய்வாளர் சரவணன், ஜெயபாலன் தனித்தனியாக நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர்.விசாரணை செய்த நீதிபதி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜாமின் வழங்காமல் இருப்பதற்காக சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கின் உண்மை தன்மையை விசாரணை செய்து பல்வேறு வெளிவராத தகவல்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து நேற்று ல் 3வது முறையாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள எஸ் எஸ் ஐ சரவணன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதி ஹேமா மூன்றாவது முறையும் ஜாமீன் கேட்டு சரவணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் 80 நாட்களாக விசாரணை நடத்தி இந்த வழக்கின் உண்மை தன்மையை 83 சாட்சிகளிடம் நேரடி விசாரணை நடத்தி 32 ஆவணங்களை தயார் செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.


