ரூ.1 லட்சம் பரிசு வெல்ல வாய்ப்பு - உடனே இந்த விருதுக்கு அப்ளை பண்ணுங்க...

 
1 1

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில், 2021-2022 நிதியாண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.1.0 கோடி செலவில் "பசுமை சாம்பியன் விருது" வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபர்கள்/நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) 2025 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள்/ பள்ளிகள்/ கல்லூரிகள்/ குடியிருப்பு நலச் சங்கங்கள்/ தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்பு/ தொழில்துறைகள் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுமையான பசுமை தயாரிப்புகள்/ பசுமை தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள், நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவை, பிற சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான விருதுக் குழு (DLAC) மூலம் ஒவ்வொரு ஆண்டும் 100 அமைப்புகள்/கல்வி நிறுவனங்கள்/ பள்ளிகள்/ கல்லூரிகள்/ குடியிருப்பு நலச் சங்கங்கள்/ தனிநபர்கள்/உள்ளாட்சி அமைப்புகள்/ தொழிற்சாலைகள் தேர்ந்தெடுக்கும்.

மேற்கூறிய விருதுக்கு நிரப்ப வேண்டிய படிவம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) உள்ளது. கூடுதல் தகவலுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை தொடர்பு கொள்ளவும்.மேலும் 2025 பசுமை சாம்பியன் விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க கடைசி தேதி 20.01.2026 ஆகும்.