தென் தமிழக மாவட்டங்களில் வருகிற 04, 05ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

 
rain

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் வருகிற 04 மற்றும் 05ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.  மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.   சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

rain

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், நாலுமுக்கில் (திருநெல்வேலி) 3 செ.மீ. மழையும். காக்காச்சி (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), மணியாச்சி (தூத்துக்குடி) உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும், வேதநத்தம் (தூத்துக்குடி), திருநெல்வேலி, மாஞ்சோலை (திருநெல்வேலி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி) உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

04.03.2023 மற்றும் 05.03.2023: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.