தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

 
rain

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 15-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.