பெருங்குடி ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு..!! பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் ரயில் பணயம் மேற்கொள்ள நடைபாதையில் காத்திருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்ற இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த 40 வயதான ரோசி என்பவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று பணி முடிந்து மாலை அவர் வீடு செல்வதற்காக பெருங்குடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்துள்ளார். சுமார் 4:12 மணியளவில் ரயில் நிலைய நடைபாதையில் இருக்கையில் அமர்ந்திருந்த பள்ளி ஆசிரியை அருகில் வந்த இளைஞர் ஒருவர், அந்த இருக்கையில் அமரலாமா என்று கேட்டுள்ளார். அந்த இளைஞரை பார்த்ததும் சந்தேகம் வரவே, அவரிடம் பேச்சுக்கொடுக்காமல் பள்ளி ஆசிரியை திரும்பிக் கொண்டிருந்தார்.

ரயில் நிலையாத்தில் யாரும் இல்லாததால், கண்ணிமைக்கும் அந்தப் பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த சம்பவத்தை உணர்ந்து, அப்பெண் கூச்சலிடும் முன் அந்த இளைஞர் ரயில் நிலையத்தில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி தலைமறைவானார். பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் அமர்ந்து இருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை இளைஞர் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ரயில் நிலையத்தில் இருந்த கேமராவில் இளைஞர் செயினை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை திருவான்மியூர் ரயில்வே போலீசார் கைது செய்து ரயில்நிலைய காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


