தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி வருவாய் பற்றாக்குறை மானியம்: 10வது தவணையை விடுவித்தது மத்திய அரசு
தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு ரூ. 9871 கோடி ரூபாயை விடுவித்து இருக்கிறது.
அரசியலமைப்பின் 275 ஆவது சட்டப்பிரிவு படி வருவாய் பகிர்வுக்குப் பின் பற்றாக்குறை மானியம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வருவாய் பகிர்வுக்குப் பிறகு மாநிலங்களின் பற்றாக்குறையை போக்க 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியம் மாதத் தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. 2021- 22 ஆம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு 1,18 ,452 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை நிதி வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது .
அதன்படி ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, ஹிமாச்சல், பிரதேசம் ,கர்நாடகா ,கேரளா, மணிப்பூர், மேகாலயா மிசோரம் ,நாகலாந்து , பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம் , தமிழ்நாடு, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்குப் பிந்தய வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்கப்பட்டு வருகிறது . ஏற்கனவே 9 மாதங்கள் வழங்கப்பட்டு விட்டன.
பத்தாவது தவணையாக இந்த மாதம் தமிழகத்திற்கு ரூ. 183. 67 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகம் உட்பட 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை ஒன்றிய அரசு விடுவித்து உத்தரவிட்டுள்ளது. 2021 - 22 ஆண்டில் தமிழகத்திற்கு இதுவரை 1,836.67 கோடியை ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது