கல்லூரி மாணவர்களிடம் கத்திமுனையில் செல்போன், பணம் பறிப்பு : சென்னையில் பரபரப்பு!
சென்னை கோடம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே அழகேஸ்வரன், அனீஸ் மற்றும் அத்தீப் ஆகிய 3 மாணவர்கள் மேன்சனில் தங்கியுள்ளனர். அவர்கள் மூவரும் செங்கல்பட்டில் இருக்கும் தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்களாம். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவர்கள் 3 பேரும் மேம்பாலத்திற்கு கீழ் இருக்கும் டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவர்களிடம் தகராறு செய்து அவர்களிடம் இருந்து ஏ.டி.எம் கார்டை பறித்து ரூ.22 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். அதோடு, மாணவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறித்துள்ளனர்.
பின்னர் மாணவர்களை ரயில்வே தண்டவாளம் அருகே அழைத்துச் சென்ற அந்த கும்பல், நேற்று அதிகாலை வரையில் கத்தியைக் காட்டி மிரட்டி அங்கேயே உட்காரச் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மாணவர்களின் ஏ.டி.எம் கார்டையும் எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாணவர்கள் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார், அவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.