பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்திய 3 போலீசார் மீது வழக்குப்பதிவு
தென்காசி ஆலங்குளம் அருகே பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்திய 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர், கண்டபட்டி, காத்தபுரம், நாலாங்குறிச்சி, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான பனை மரங்களில் இருந்து பனைத் தொழிலாளர்கள் பதநீர் இறக்கி விற்பனை செய்வது வழக்கம். இவர்களில் சிலர் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமாக கள் இறக்கியும் விற்பனை செய்யப்படுகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா சாதாரண உடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அங்குள்ள பெருமாள் சேட் என்பவரது மகன் மணிகண்டன் (35) வீட்டில் சோதனை செய்தபோது கள் ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து, மணிகண்டனை அவர் தொழில் செய்யும் பனை மரத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்யுமாறு எஸ்.ஐ வற்புறுத்தியுள்ளார். மரத்தில் ஏறிப் பார்த்துவிட்டு "கள் இல்லை" என மணிகண்டன் கூறியபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் தரையில் விழுந்து கட்டிப்புரண்டு சண்டையிட்ட நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் கிடந்த பனை மட்டையால் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலைகுலைந்த எஸ்.ஐ இசக்கிராஜா, தற்காப்புக்காகத் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து மின்னல் வேகத்தில் மணிகண்டனை நோக்கிச் சுட்டார். தகவல் அறிந்து ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீஸ் படை விரைந்து வந்து, காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து பனை தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 3 காவலர்கள் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



