மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே மாணவி அமர வைக்கப்பட்ட விவகாரம்- 3 பேர் மீது வழக்குப்பதிவு

கோவையில் மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே மாணவி அமர வைக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்படும் சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 5-ம் தேதி பூப்பெய்திய நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 7-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் தேர்வு எழுதுவதற்கு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக, மாதவிடாய் ‘தீட்டு’ எனக்கூறி அவரை வகுப்பறையின் படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாக பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்துக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், கோவயில் வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டு மாணவி தேர்வு எழுதிய விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் மாணவியின் தந்தை சுரேந்திரநாத் அளித்த புகாரின்பேரில், மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே மாணவி அமர வைக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகிய 3 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.