ஒருமையில் திட்டியதற்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு..!

 
1

கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட மரவாபாளையம் கிராமத்தில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் தலைமையிலான வீடியோ கண்காணிப்பு குழுவினர், அதிமுக பிரசாரத்தில் 10 கார்களுக்கு மேல் செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவினர் தாங்கள் சென்ற வாகனத்தை விட்டு கீழே இறங்கிவந்து, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி வினோத்குமார் மற்றும் குழுவினரை ஒருமையில் பேசி, தகாத வார்த்தையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரி வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.