’வெடிகுண்டு வீசுவேன்’ என வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் தேர்தல் பரப்புரையின் போது "வெடிகுண்டு வீசுவதாக" பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், கடந்த 28.ம் தேதி பவானி சாலையில் நெரிக்கல் மேடு என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் அதனை வீசினால், உங்களை புதைக்கும் இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது, என்றும் பேசி இருந்தார் . மேலும் இனப்பற்று வேண்டாம், இனவெறி கொள்ளுங்கள் என்றும் கூறி இருந்தார். இந்த பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இனம் மொழி அடிப்படையில் பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சீமான் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு எதிராக செயல்பட்டு, குற்றம் செய்யத் தூண்டும் வகையில் பேசுதல், மதம் இனம் மொழி அடிப்படையில் பிரிவினை வாதத்துடன் தவறான தகவல்களை உள்நோக்கத்துடன் பரப்புதல், தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தி வன்முறையை தூண்டுதல் என BNS-351(c), BNS-196, BNS-(1)(b)(1)(c) பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.