“234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர்..”- புஸ்ஸி ஆனந்த்

 
புஸ்ஸி ஆனந்த்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 1,710 உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் நடிகர் விஜயின் தாய் சோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் பங்கேற்றனர். 


தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “ரசிகர் மன்றத்திற்காக 32 ஆண்டுகள் உழைத்த தொண்டர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் பதவி வழங்கியவர் நமது தலைவர். மற்ற கட்சிகளில் வாரிசு அரசியல் நடக்கிறது. ஆனால் இங்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி. பணம் கொடுத்தெல்லாம் பதவி வாங்க முடியாது. புகழை விரும்பாதவர் நமது தலைவர். ஜல்லிக்கட்டு, நீட், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கள்ளக்குறிச்சி, பரந்தூர் என அனைத்து பிரச்சனைகளிலும் நேரடியாக மக்களை சந்திக்கிறார். பல கோடிகளை விட்டுவிட்டு, மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார். ஆட்சி சரியாக இருந்திருந்தால், அவர் தன் வேலையை பார்த்திருப்பார். 

2026ஆம் ஆண்டு தலைவர் முதலமைச்சராக அமருவார். 2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும். 234 தொகுதிகளிலும் விஜய் முகம்தான் வேட்பாளர். பாசத்தால் சேர்ந்த இக்கூட்டம், 2026ல் தலைவரை முதல்வராக்கும். வரும் ஒன்பது மாதங்களும் கடினமாக உழைத்தால், நம் இலக்கை நிச்சயம் அடையலாம். மக்கள் நம்மை எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.