தொகுதி மறுவரையறை தேவையற்றது - புஸ்ஸி ஆனந்த் பேச்சு!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் என தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொண்டார். தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது, தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். இது தேவையற்றது. தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர வேண்டும் என கூறினார்.