சீர்காழியில் பேருந்து, டேங்கர் லாரி, பைக் மோதி கோர விபத்து.. 4 பேர் உயிரிழப்பு..

 
accident


சீர்காழியில் அரசு சொகுசு பேருந்து, டேங்கர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்  4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நள்ளிரவில் அரசு சொகுசு பேருந்து ஒன்று  சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனம் ஒன்றுள்ளது.  அந்த  இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து  ஓட்டுநர் சாலையின் இடது புறமாக திருப்ப முயன்றுள்ளார்.  அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது  வேகமாக மோதியது.

dead

இதில் நிலைகுலைந்து  மேலும் தறிகெட்டு ஓடிய பேருந்து , எதிரே வந்த இருசக்கர வாகனத்திலும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.  இந்த கோர விபத்தில்  இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய 3 பேர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி   சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்,  பேருந்தில் பயணம் செய்த 44 பேரில்  நடத்துநர் விஜயசாரதி உள்ளிட்ட 26 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக விபத்து குறித்து  காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  

அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு  108 வாகனத்தின் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  அப்போது  அரசு பேருந்து நடத்துநர் விஜயசாரதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.  மேலும் படுகாயமடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.