பஸ் டிரைவருக்கு திடீர் வலிப்பு.. சாலையில் நடந்த கோர விபத்து..!
சென்னையில் நேற்றிரவு மாநகர பஸ் ஒன்று கண்ணதாசன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை மோகன் (வயது 50) என்பவர் ஓட்டினார். இந்த நிலையில், பஸ், மெரினா கடற்கரை பேருந்து நிறுத்தத்தை தாண்டியதும், டிரைவர் மோகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுபாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக சென்றது. ஒரு கட்டத்தில் பஸ், சாலை ஓரத்தில் இருந்த 2 ஆட்டோக்கள் மீது இடித்துகொண்டு சாலை தடுப்பு சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் காயமடைந்த ஆட்டோ டிரைவர்கள் மணிகண்டன் (42), மணிமாறன் (37) மற்றும் பஸ் டிரைவர் மோகன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் ஆட்டோக்கள் பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

