ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி.. இனி எந்த அலுவலகத்துக்கும் அலைய வேண்டாம்..

 
ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி.. இனி எந்த அலுவலகத்துக்கும் அலைய வேண்டாம்.. 


தமிழ்நாட்டில் முதல் முறையாக கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 541 கோடியே  32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள  4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ. 382 கோடியே 84 லட்சம்  செலவில் கட்டப்பட்டுள்ள 1,459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க, தமிழ்நாட்டில் முதல் முறையாக கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.   

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு கட்டிட அனுமதி தேவையில்லை. பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.  பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இணைய வழி கட்டிட அனுமதி திட்டத்தின்  முக்கிய அம்சங்கள் : 

இத்திட்டத்தின் படி www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை.

கட்டிடப்பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்களிக்கப்படுகிறது.

பரிசீலனைக் கட்டணம், கட்டமைப்பு, வசதிக்கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்களிக்கப்படுகிறது. 

2500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.