கொடூரம்: காதலியை சந்திக்க வந்த இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு சித்ரவதை!

 
1

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தனது காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞரைப் பிடித்து, கயிற்றால் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தாக்குதல் நடத்திய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், அந்த இளைஞரை விடுவிக்க அவரது குடும்பத்தினரிடமிருந்து கிராம சபை ₹5 லட்சம் வசூலித்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஹாரன்பூர் மாவட்டம், மிர்சாபூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலியைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இளைஞரைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், இளைஞரைக் கயிற்றால் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவரைத் தொடர்ந்து தாக்கிய பின்னர், வீட்டின் அருகில் இருந்த ஒரு கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

மறுநாள் காலையில் இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இளைஞரின் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் அவசரமாகக் கிராம சபை (பஞ்சாயத்து) கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், வாலிபரை விடுவிப்பதற்கு ஈடாக அவரது குடும்பத்தினர் ₹5 லட்சம் அபராதமாக வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி இளைஞரின் குடும்பத்தினரும் ₹5 லட்சத்தைக் கொடுத்து அவரை மீட்டுச் சென்றுள்ளனர்.

இதனிடையே, இளைஞரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு அடிக்கும் கொடூரக் காணொளி இணையதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், வாலிபர் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட நிலையில், வலியால் அலறித் தன் முகத்தை மறைக்க முயல்வதும், சுற்றி நிற்கும் நபர்கள் வேடிக்கை பார்ப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவைக் கொண்டு வழக்குப் பதிவு செய்துள்ள மிர்சாபூர் காவல்துறையினர், இளைஞரைத் சித்ரவதை செய்த நபர்களை தீவிரமாக அடையாளம் கண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.