#BREAKING : வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு வீமராஜா காலமானார்..!

 
1

துாத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதால் சிறைபிடிக்கப்பட்டு துாக்கிலிடப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சியில் அவரது கோட்டை அமைந்துள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் நான்காவது வாரிசான வீரபாண்டியதுரையின் மகனும் ஐந்தாவது வாரிசான வீமராஜா ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை, 87, பாஞ்சாலங்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்தார். அரசின் தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெற்றார்.

இந்நிலையில், நேற்று காலை தியாகிகளுக்கான ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக ஓட்டப்பிடாரத்தில் உள்ள அஞ்சலகத்துக்கு சென்றார். அங்கிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இருப்பினும், சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். 

அவரது உடல், இன்று, பாஞ்சாலங்குறிச்சியில் அடக்கம் செய்யப்படுகிறது. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும். முருகதேவி என்ற மகளும். கணபதி ராஜா என்ற மகனும் உள்ளனர்.