#BREAKING : இடைக்கால நிவாரணம் அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!

 
Q

தமிழக அரசு புதிய இடைக்கால நிவாரணத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 30% வரை இடைக்கால நிவாரணமாக வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இத்திட்டத்தின் முழுமையான விதிகள் இன்னும் வகுக்கப்படாத நிலையில், தற்காலிகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த விதிமுறைகள் முழுமையாக உருவாக்கப்பட்டு அமலுக்கு வரும் வரை, தற்காலிக ஏற்பாடாக அரசு ஊழியர்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்படும்.

இந்த புதிய இடைக்கால நிவாரணத் திட்டமானது கடந்த 01-01-2026 முதலே முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

ஓய்வூதிய விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்டு இறுதி செய்யப்படும் வரை, ஊழியர்கள் தங்களின் பணி நிறைவின் போது கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் (Basic Pay) 30 விழுக்காடு (30%) அல்லது ரூ.10,000 — இதில் எது அதிகத் தொகையோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த கணக்கீட்டுத் தொகையுடன் கூடுதலாக 60% அகவிலைப்படியும் (Dearness Allowance) சேர்த்து இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் கடந்த 1-4-2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சி.பி.எஸ் (CPS) எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆரம்பம் முதலே இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் "பழைய ஓய்வூதியத் திட்டத்தையே" (OPS) அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட பல்வேறு கூட்டமைப்புகள் மூலமாக பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அண்மையில், தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்த ஜாக்டோ-ஜியோ சங்க நிர்வாகிகள், தங்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை மிக வலுவாக முன்வைத்திருந்தனர்.

மறுபுறம், இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கான முழுமையான விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் இன்னும் இறுதி செய்யப்படாமல் இழுபறியாகவே நீடித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஜனவரி 1, 2026 முதல் நடப்பு ஜூன் மாதம் வரை ஓய்வு பெற்ற 10,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காமல் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டது.

பணி நிறைவு பெற்றும் கையில் பணமின்றி தவித்து வந்த இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தற்போது பிரத்யேக அரசாணை ஒன்றை வெளியிட்டு இந்த இடைக்கால நிவாரணத்தை அதிரடியாக அறிவித்துள்ளது.