#BREAKING : கட்சியிலிருந்து விலகினார் சினேகா மோகன்தாஸ்: மக்கள் நீதி மய்யத்தில் மீண்டும் ஒரு முக்கிய நிர்வாகி விலகல்!
தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ், ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை உத்வேகமாகக் கொண்டு ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் தஞ்சமடைந்தவர்கள், வீடுகள் இல்லாமல் இருப்பவர்கள் என அனைவருக்கும் தினமும் மூன்று வேளையும் தேடிச் சென்று உணவளித்து பட்டினியை எதிர்த்து போராடி வருவருகிறார். இவர் ஃபுட் பேங்க் இந்தியா (இந்திய உணவு வங்கி) என்றா அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார்.
சினேகா மோகன்தாஸ் ஃபுட் பேங்க் மூலம் வீடற்றவர்கள், ஏழைகள், ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் இருப்பவர்கள் என தினமும் பலரின் பசியைப் போக்கி பசிக்கு எதிரான போராட்டம், பட்டினி இல்லாத நாடு என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவருகிறார். இவர் கமலின் மக்கள் நீதி மய்யத்தால் ஈர்க்கப்பட்டு கமலின் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.அவரை வரவேற்று மக்கள் நீதி மய்யத்தின் சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் செயலாளராக நியமித்திருந்தார் கமல்.
இந்நிலையில் அவர் மநீம விட்டு வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளராக இருந்த சினேகா மோகன்தாஸ் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தில்,
மக்கள் நீதி மய்யத்தின் எனது பொறுப்புகளில் இருந்து விலகுவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
அரசியலில் நுழைவதற்கு முன்பே, எனது பயணம் மக்கள் சேவையை நோக்கியே அமைந்திருந்தது. 'ஃபுட் பேங்க் இந்தியா' (Food Bank India) என்ற எனது தொண்டு நிறுவனத்தின் மூலம், 2015-ஆம் ஆண்டு முதல் பசியற்ற சமூகத்தை உருவாக்குவதற்கும், பின்தங்கிய சமூகத்தினருக்கு ஆதரவளிப்பதற்கும் கடந்த பத்து வருடங்களாக உழைத்து வருகிறேன். அந்தப் பயணம், 2020 மார்ச் மாதத்தில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில்தான், மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்காக திரு. டாக்டர் கமல்ஹாசன் எம்பி அவர்களால் நான் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டேன். மிகுந்த நம்பிக்கையோடு நான் அதை ஏற்றுக்கொண்டேன். இந்த இயக்கம் தமிழ்நாட்டில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும்; நேர்மை, தகுதி மற்றும் மக்களுக்கான முன்னுரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் என்றும் நான் உண்மையாக நம்பினேன்.
அந்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்குள் வரத் தூண்டியது.
எனது இந்த அரசியல் பயணத்தில், 2021 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும்; பெண்களுக்கான பணிக்குழுத் தலைவர், சைதாப்பேட்டை மற்றும் வேளச்சேரி மாவட்டச் செயலாளர், மகளிர் அணியின் மாநிலச் செயலாளர் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் பாக்கியத்தையும் பெற்றேன்.
பேரிடர் நிவாரணப் பணிகள், குடிமை சார்ந்த முன்னெடுப்புகள், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முயற்சிகள், பொது நலத் திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள், பூத் மேலாண்மை மற்றும் அடிமட்ட அளவிலான மக்கள் தொடர்பு என எனக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பிலும் எனது முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினேன். ஏனெனில், சேவையின் பரந்த நோக்கத்தை நான் ஆழமாக நம்பினேன்.
ஒவ்வொரு பயணமும் நமக்கு வெவ்வேறு பாடங்களைக் கற்றுத் தருகிறது. அதேபோல, இந்த பயணமும் மாற்றம் என்பது நாம் நினைப்பதை விட மிகவும் சிக்கலானது என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. நான் அரசியலில் நுழைந்தபோது எனக்குள் இருந்த சில எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனாலும், எனக்குக் கிடைத்த பாடங்கள், நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக இந்த அனுபவத்தை நான் நன்றியோடு பார்க்கிறேன்.
எனவே, மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன்.
எனது தலைவர் திரு. டாக்டர் கமல்ஹாசன் எம்பி அவர்களின் அரசியல் களத்தின் மிக சவாலான தருணங்களில், நான் அவருக்கு பின்னால் உறுதியாக நின்றேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எந்தவொரு மனக்கசப்பும் இன்றி, ஒரு தெளிவான பார்வையோடு நான் இதிலிருந்து வெளியேறுகிறேன். மக்களுக்காக நான் செய்த பணிகளில் பெருமகிழ்ச்சி அடைவதோடு, என்னோடு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நின்ற ஒவ்வொரு தொண்டருக்கும், ஆதரவாளருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பொது சேவைக்கான எனது அர்ப்பணிப்பு என்றும் மாறாது. 'ஃபுட் பேங்க் இந்தியா' (Food Bank India) மற்றும் 'தலைவி' (ThalaiWE) அமைப்புகளின் மூலம் நான் தொடர்ந்து சமூகத்திற்கு சேவை செய்வேன். சேவை, நேர்மை மற்றும் அர்த்தமுள்ள மாற்றங்கள் மதிக்கப்படும் தளங்களில் தொடர்ந்து எனது பங்களிப்பை வழங்குவேன் என்று நம்புகிறேன்.
எனது பயணத்தின் இந்த அத்தியாயத்தில் ஒரு பகுதியாக இருந்த திரு. டாக்டர் கமல்ஹாசன் எம்பி அவர்களுக்கும், தலைமைக்கும் மற்றும் ஒவ்வொரு கட்சி தொண்டருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Resigning from @maiamofficial.
— Sneha Mohandoss (@snehamohandoss) June 6, 2026
Thank you everyone for the support throughout this journey. ♥️🙏 pic.twitter.com/rTM7Az0zfu

