#BREAKING : மறைந்த நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு அரசு மரியாதை - நாசர் அறிவிப்பு..!

 
nasar

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி நேற்று உயிரிழந்த நிலையில், அவரது மகள் யக்ஞ பிரபா மற்றும் நடிகை குட்டி பத்மினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சௌகார் ஜானகியின் மூத்த மகள் யக்ஞ பிரபா பேசுகையில், ”அவரைப் போன்ற ‎ஒரு கண்ணியமிக்க கலைஞர், ஒரு தாயை பார்க்க முடியாது. எங்களுக்கு கஷ்டமே தெரியாதவாறு அதே சமயத்தில் மிகவும் கண்டிப்பாக வளர்த்தார். எனது தாயாருக்கு அரசு மரியாதை தொடர்பாக குடும்பத்தினர் பேசுவார்கள் என நினைக்கிறேன். அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டால் நாங்கள் பெருமையாக உணர்வோம்.

தொடர்ந்து நடிகை குட்டி பத்மினி பேசுகையில், ”‎நேற்று முன்தினம் இரவு அவரை பார்த்து பேச முடிந்தது, அப்போது அன்போடு பேசினார். அவர் எனக்கு நன்றி தெரிவித்த போது, நான் தான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று சொன்னேன். அவருக்குப் பிரியமானவர் அவரது பேத்தி வைஷ்ணவி. நடிகை நாசர் அவருக்கு அரசு மரியாதை கோரிக்கை விடுத்துள்ளார்.

எனக்கு மிக நெருக்கமானவர், என் தாயை நேசிக்கும் அளவுக்கு அவரை நேசிக்கிறேன். மேலும் அவரை ’சௌகார் அம்மா’ என்று கூறுவார்கள். அவர்கள் மீது எல்லோருக்கும் மரியாதை உண்டு, கடைசி வரை ராணியை போன்று வாழ்ந்தார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்று நடிகை சௌகார் ஜானகியும் ஒரு சகாப்தம். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த அனைவரும் வர வேண்டும். கடைசியாக ஜானகி அம்மாவின் கையை பிடித்து பேச முடிந்தது” என கண்ணீருடன் பேசினார்.

இந்நிலையில் மறைந்த நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது என்றும் நடிகர் சங்கம் கோரிக்கை வைத்த நிலையில் அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது என கூறினார், மேலும் இன்று மாலை 4:30 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுவதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் அறிவித்துள்ளார்.