#BREAKING குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.. காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 
tnpsc tnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,  கூடுதலாக 559 காலி பணியிடங்களின் சேர்க்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-IV (தொகுதி-IV)-ற்கான நேரடி நியமனத்திற்காக 30.01.2024 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இத்தெரிவிற்கான எழுத்துத் தேர்வு 09.06.2024 முற்பகல் நடைபெற்றது. இத்தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இத்தெரிவிற்கான தேர்வு முடிவுகளை தேர்வாணையம் இன்று (28.10.2024) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தரவரிசை மற்றும் மதிப்பெண்களை தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpscresults.tn.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் அவர்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். 

TNPSC Result

தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைக்கோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தெரிவு செய்யப்படுவர். 

tnpsc

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல் / கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்படமாட்டாது. எனவே தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.