#BREAKING : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: முதல்வர் விஜய்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.
அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில், தமிழக முதல்வர் விஜய் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள். இதனால் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
இதனால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

